Tuesday 27 December 2011

மலையாளிகள் நடத்தும் இசைநிகழ்ச்சி கலந்து கொள்ள மாட்டேன் இளையராஜா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முல்லை பெரியாறு அணைப்பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன்.
கூடுமானவரை நான் ஒப்புக்கொண்ட இசை நிகழ்ச்சியைத் தவிர்க்கப்பார்க்கிறேன் என்று இசை பேரறிஞர் இளையராஜா கூறியுள்ளார். கேரள நிறுவனமான மலபார் கோல்டு ஹவுஸ் ஸ்பான்சர் செய்யும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சையில் அந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்னால் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று இளையராஜா தெரிவித்துள்ளார். ஆனாலும் தவிர்க்கப் பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூடுமானவரையில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க முயற்சி செய்கிறேன் என்று பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் என்றென்றும் ராஜா என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் பிரதான விளம்பரதாரர் மலபார் கோல்ட் என்ற கேரள நிறுவனமாகும்.
இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியானதும், பெரியார் திகவினர் இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசு மற்றும் கேரள வியாபார நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அவரிடம் மனு கொடுக்க பெரியார் தி.க.வினர் நேற்று அவரது வீட்டுக்கு வந்தனர். சில தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இளையராஜா ஊரில் இல்லாததால், அவரது உதவியாளர் மனுவைப் பெற்றுக் கொண்டார். இந்த விவரம் வெளிநாட்டில் இருந்த இளையராஜாவிடம் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே தி.நகர் உதவி ஆணையர் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்ட இளையராஜா, இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே ஒப்பந்தம் ஆகிவிட்டது. என் துணைவியாரின் மரணத்திற்கு பிறகு, நான் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிக்கலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின், தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்துக்கு ஆளாவேன் என்பது எனக்கும் தெரியும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். எனவே எப்படியாவது நான் நிகழ்ச்சியை ஒத்திப்போடுவதற்கோ, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கோ ஏற்பாடு செய்கிறேன் என்று போராட்டக்காரர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையால் பலன் பெறும் தேனி மாவட்டத்தில்தான் இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: