Sunday 10 July 2011

தனது இறுதி பதிப்பை வெளியிட்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இங்கிலாந்தில் கடந்த 168 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த பிரபல வார பத்திரிகை நியூஸ் ஆப் தி வேர்ல்ட் கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்கள் பற்றி மிகவும் பரபரப்பான செய்திகள் வெளியிட்டது.அரசு குடும்பத்தினர், முக்கிய அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. சிலரின் தனிப்பட்ட விடயங்களும் அம்பலமானதால் பெரும்புள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிகைக்கு எப்படி இந்த தகவல் கிடைத்தது? என பலரும் திகைப்படைந்தனர். இங்கிலாந்து அரசுக்கும் பாதிப்படைந்ததால் பிரச்சனை நாடாளுமன்றம் வரை சென்றது.
இது குறித்து தீவிரமாக நடந்த விசாரணையில்,"பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்து ரகசிய தகவல்களை பெற்றது, போன் ஒட்டு கேட்பு போன்றவற்றின் மூலம் தான் இந்த பத்திரிக்கை ரகசிய தகவல்களை பெற்று பரபரப்பாக செய்தி வெளியிடுகிறது" என கண்டறியப்பட்டது.
இதையடுத்து பத்திரிகையின் முன்னாள் எடிட்டரும், இங்கிலாந்து பிரதமரின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான ஆண்டி கவுல்சன், முன்னாள் மூத்த நிருபர் கிளைவ் குட்மேன்(63) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் பொறுப்பில் இருந்த போது தான் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. நெருக்கடியை சந்தித்த பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகிகள் ரூபர்ட் முர்டோ மற்றும் அவரது மகன் ஜேம்ஸ் முர்டோ ஆகியோர் பத்திரிகை நிறுவனத்தை மூடுவதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தனர்.
அதன்படி நேற்று தனது இறுதி பதிப்பை அச்சடித்தனர். இது அந்த பத்திரிக்கையின் 8 ஆயிரத்து 674வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் பக்கத்தில் "நன்றி குட்பை" என அச்சிடப்பட்டிருந்தது.

0 comments: