Tuesday 12 July 2011

புதிய மத்திய அமைச்சர்கள் 8 பேர் இன்று பதவியேற்றனர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். மொத்தம் 8 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மத்திய அமைச்சரவையில் இன்று பெரிய அளவிலான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 8 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 7 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்.பி.யான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டார். ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டார். சட்டத்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், கேபினட் அமைச்சராக்கப்பட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்பட்டார்.
சட்டத் துறை பறிக்கப்பட்டு, வீரப்ப மொய்லிக்கு நிறுவனங்கள் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க. இடம்பெறவில்லை. தயாநிதி மாறன் வசம் இருந்த ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பாக அனந்த் சர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் விவரம்:
கேபினட் அமைச்சர்கள்:
1. வி கிஷோர் சந்திர தியோ - பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்
2. பேனி பிரசாத் வர்மா - ஸ்டீல்
3. தினேஷ் திரிவேதி - ரயில்வே
4. ஜெய்ராம் ரமேஷ் - ஊரக வளர்ச்சித் துறை
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):
5. ஸ்ரீகாந்த் ஜெனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், ரசாயனம்
6. ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல்
7. பிரணாப் சிங் கடோவர் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி
8. குருதாஸ் காமத் - குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்
இணை அமைச்சர்கள்:
9. சுதிப் பந்தோபத்யாய - உடல்நலம் மற்றும் குடும்பநலம்
10. சரண் தாஸ் மகந்த் - விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை
11. ஜித்தேந்திர சிங் - உள்துறை
12. மிலிந்த் தியோரா - தகவல் தொடர்பு
13. ராஜீவ் ஷுக்லா - நாடாளுமன்ற விவகாரம்
இலாகா மாற்றப்பட்டவர்கள்:
கேபினட் அமைச்சர்கள்:
விலாஷ் ராவ் தேஷ்முக் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
வீரப்ப மொய்லி - நிறுவன விவகாரத்துறை
ஆனந்த் சர்மா - வர்த்தகம், கூடுதலாக ஜவுளித்துறை
பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூடுதலாக நீர் வளம்
சல்மான் குர்ஷித் : சட்டம், கூடுதலாக சிறுபான்மை விவகாரங்கள்
இணை அமைச்சர்கள்:
இ. அகமது - வெளியுயறவுத் துறை மற்றும் மனித ஆற்றல்
வி. நாராயணசாமி - ஊழியர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம்
ஹரிஷ் ராவத் - விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை, நாடாளுமன்ற விவகாரம்
முகுல் ராய் - கப்பல்
அஷ்வனி குமார் - திட்டம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்
ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறனும், முரளி தியோராவும் ராஜினாமா செய்து விட்டார்கள். இவர்கள் போக பி. கே. ஹந்திக், எம். எஸ். கில், காந்தி லால் புரியா, சாய் பிரதாப், அருண் எஸ். யாதவ் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்.
எதிர்பார்த்தபடியே, நிதித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை.

0 comments: