Monday 7 March 2011

இன்றைய அரசியல் திருப்பங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விஜய்காந்த் : தே.தி.மு.க
தே.மு.தி.க.வில் 30 மாவட்ட செயலாளர்களுக்கு எம்.எல்.ஏ. “சீட்” கொடுக்க
கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார்.   சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் அ.தி.மு.க.விடம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் அல்லது உளுந்தூர்பேட்டையில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் களத்தில் எதையும் சமாளிக்க கூடியவராகவும் எதிர்த்து போராடக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்களையும் ஆய்வு செய்து தேர்ந்து எடுக்கிறார்.  அந்த வகையில் தே.மு. தி.க.வில் உள்ள 57 மாவட்ட செயலாளர்களில் 30 பேரை தேர்வு செய்து எம்.எல்.ஏ. “சீட்” வழங்க அவர் முடிவு செய்துள்ளார். அந்த 30 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜயகாந்த் தயாரித்துள்ளார்.
 தி.மு.க :
தி.மு.க. சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள 6 மந்திரிகளும் திங்கட்கிழமை பதவிகளை ராஜினாமா  கடிதம் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வின் அதிரடி முடிவால் காங்கிரஸ் தலைவர்களிடம் மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் முதலில் சலனம் கூட ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தி.மு.க. விடம் தொடர்பு கொண்டு பேசாமல் இருந்தனர்.   இதனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி விரிசல் தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நீடித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியும், தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் நேற்றிரவு சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அதன் பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் நேற்றிரவு 10.30 மணிக்கு போனில் தொடர்பு கொள்ள பிரணாப் முகர்ஜி முயன்றார். அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து பிரணாப் முகர்ஜி போனில் டி.ஆர். பாலுவுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய மந்திரி சபையில் இருந்தும் தி.மு.க. விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார். காங்கிரசுக்கு சற்று கால அவகாசம் தர வேண்டும் என்றும் டி.ஆர். பாலுவிடம் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகுவது என்ற முடிவு உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

தற்போதைய சூழ்நிலைகள் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீண்ட யோசனைக்குப்பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. உங்கள் கருத்தை எங்கள் கட்சித் தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மீண்டும் பேசி வருகிறது. இது தொடர்பாக எங்கள் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றார்.

இந்த நிலையில் இன்று (திங்கள்) காலை 6.40 மணிக்கு இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் தி.மு.க. மந்திரிகள் மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், தயாநிதி மாறன் ஆகிய 4 பேரும் டெல்லி சென்றனர். மற்றொரு மந்திரி காந்தி செல்வன் கோவையில் இருந்து டெல்லி சென்றார். அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் டெல்லியில் உள்ளார்.   அவர்கள் 6 பேரும் 11 மணி அளவில் பாராளுமன்றத்துக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 மணிக்கு தி.மு.க. மந்திரிகளை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை.

தாமஸ் விவகாரம் பற்றி பாராளு மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருந்ததால் பிரதமர் தி.மு.க. மந்திரிகளை சந்திக்கவில்லை. இதனால் தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி அவர்களால் 11 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கொடுக்க இயல வில்லை.

இந்த நிலையில் தி.மு.க. மந்திரிகள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், தயாநிதி மாறன் ஆகியோர் பாராளுமன்ற அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. இந்த சந்திப்பின் போது சோனியாவின் ஆலோசகர் அகமதுபடேல் மற்றும் குலாம்நபி ஆசாத் உடன் இருந்தனர். இதற்கிடையே தி.மு.க. மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள மு.க. அழகிரி வீட்டில் ஒன்று கூடினார்கள். அங்கு அவர்கள் பிரணாப் முகர்ஜியின் கடைசி கட்ட சமரச முயற்சி பற்றி விவாதித்தனர்.

காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள கோரிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. பிரதமரை சந்திக்க அனுமதி பெறுவது பற்றியும் பேசப்பட்டது. இதையடுத்து ராஜினாமா செய்வதை மாலை 6.30 மணி வரை ஒத்திவைக்க தி.மு.க. மந்திரிகள் முடிவு செய்தனர். தி.மு.க. மந்திரிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் மாலை 6.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே பிரதமரை மாலை 6.30 மணிக்கு தி.மு.க. மந்திரிகள் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தி.மு.க. வுடன் சமரசமாக செல்ல காங்கிரஸ் தலைவர்கள் பலர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் இடையே எந்த சுமூக உறவும் ஏற்பட வில்லை. தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக குலாம்நபி ஆசாத் கூறினார். அவர் மேலும் கூறுகையில் கூட்டணி உடையாது என்று நம்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலக கூடாது. எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய முடிவு செய்து தெரிவிக்கிறேன் என்று கூறி உள்ளதாக தெரிகிறது.

முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் போனில் பேசிய பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். கருணாநிதியுடன் பேசிய விவரங்களை அவர் சோனியாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 60 தொகுதிகள் மட்டுமே தரும். அந்த 60 தொகுதிகள் எவை-எவை என்பதை தி.மு.க.வே முடிவு செய்து அறிவிக்கும். இதற்கு சம்மதித்தால் தி.மு.க. விலகாது என்று பிரணாப் முகர்ஜியிடம் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியதாக தெரிகிறது.

இதை சோனியாவிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். கருணாநிதி கூறி இருப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசித்து வருகிறார். இன்று மாலை முதல்- அமைச்சர் கருணாநிதியுடன் மீண்டும் பேச உள்ளதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். கருணாநிதி ஒதுக்கி கொடுக்கும் 60 இடங்களை காங்கிரஸ் மேலிடம் ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தி.மு.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் சமரசம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. காங்கிரசின் 7 ஆண்டு கூட்டணி தொடருமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும். கடைசியாக வந்த தகவல் படி நாளை  (செவ்வாய் கிழமை ) ஒரு நாள் ராஜினாமா தள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்னையில் 5 இடங்கள் கேட்க்கும் பா.மா.கட்சி
தொகுதி மறு சீரமைப்பு மற்றும் வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் சில தொகுதிகளை மாற்றி கேட்க பா.ம.க. திட்டமிட்டுள்ளது. அதன்படி வேளச்சேரி, அண்ணாநகர், விருகம் பாக்கம், திரு.வி.க.நகர், பெரம்பூர், சேலம் மேற்கு, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, நெய்வேலி, திருப்போரூர், செங்கல்பட்டு, கும்மிடிபூண்டி, சிதம்பரம், வந்தவாசி, செஞ்சி, சோளிங்கர், அணைக்கட்டு, ஆற்காடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாலகோடு, கபிலர்மலை, மயிலாடுதுறை, புவனகிரி, திருப்பத்தூர், மயிலம், அரக்கோணம், விக்கிரவாண்டி, மதுர வாயல், அம்பத்தூர் ஆகிய 31 தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.

இந்த தொகுதிகளை ஒதுக்கும்படி தி.மு.க. குழுவினருடன் பா.ம.க. குழுவினர் பேசிவருவதாக கூறப்படுகிறது.        
ம.தி.மு.க / கம்யூனிஸ்டு
அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.   கம்யூனிஸ்டு கட்சிகளையும், ம.தி.மு.க.வையும் பேச்சு வார்த்தைக்கு அ.தி.மு.க. தரப்பில் அழைக்காமல் இருந்தனர். காங்கிரஸ்- தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி சிக்கல் காரணமாக அ.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படலாம், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியே வரலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்று மாலை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

கேள்வி:- கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளாரே?

பதில்:- நாங்கள் ஊழலையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து வருகிறோம்.
எனவே இந்த கருத்து முரண்பாடானது. அதற்கு வாய்ப்பில்லை.

கேள்வி:- காங்கிரஸ்- அ.தி. மு.க. கூட்டணி ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே, அப்படியானால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பதில்:- இன்று மாலை அ.தி.மு.க. எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இதில் இறுதி முடிவு ஏற்படும். எனவே காங்கிரஸ்- அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று மாலை போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து பேசி முடித்ததும் மாலை 6.30 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள். அதன்பிறகு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி உடன்பாடு செய்து கொள்வார் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி > மாலைமலர்


1 comments:

said...

Just now DMK frauds[azhakiri, maran]meet chief fraud sonia.