Saturday 7 August 2010

வாடகை இருப்பவரிகளிடம் கூடுதல் மின்கட்டணம் வசூலித்தால் சிறை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு இருப்பவர்களிடம் மின் கட்டணம் அதிகம் வசூலித்தால்
ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின் 24 6 2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1 3னின் விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேற்படுகையில் வீட்டு மின் நுகர்வோருக்கான அதிகபட்ச மின்கட்டணம் ழூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும்.

எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.

வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003 ம் ஆண்டு மின்சார சட்டத்தின் 142 மற்றும் 146 ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க குற்றமாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின் 142 ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146 ம் பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று கூறினார். 

0 comments: