Wednesday 15 February 2012

விஜயகாந்த் - ஸ்டாலின் அரசியல் பேசவில்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விருதுநகரில் இருந்து சென்னை திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட தே.
மு. தி. க. தலைவர் விஜயகாந்த், தி. மு. க. பொருளாளர் ஸ்டாலின் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்; அரசியல் பேசவில்லை.
அருப்புக்கோட்டையில் பெப். 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொணடு, அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச்சென்றார்.
தலைமை நிலையச்செயலர் பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம். எல். ஏ. உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை செல்வதற்காக தி. மு. க. பொருளாளர் ஸ்டாலின், விமான நிலைய வி. ஐ. பி. அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் இருந்தனர்.
முன்கூட்டியே சென்ற தே. மு. தி. க. நிர்வாகிகள் ஸ்டாலின் இருக்கும் தகவலை தொலைபேசியில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜயகாந்திடம் ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம் நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, சற்று தள்ளி கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும் வேறு எதுவும் பேசவில்லை என கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.
தே. மு. தி. க. நிர்வாகி ஒருவர் கூறுகையில் :
‘விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்ட சபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக் கொள்வதில்லையா. அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை’ என்றார்.
விமான நிலைய சந்திப்புக்கு பின் மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம் செய்தனர். மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில் பேசிக்கொண்ட நிகழ்வை மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

0 comments: