Friday 8 April 2011

இந்தியா ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு அதிக வரவேற்பு உள்ளது. இதுகுறித்து சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் "ஸ்டிரெய்ட் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 4 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இந்திய ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு பணிபுரிவதற்காக வந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டில் மேலும் 10 ஆசிரியர்கள் பணிபுரிவதற்காக சிங்கப்பூர் வரவுள்ளனர்.
சிங்கப்பூர் மாணவர்களுக்கு இந்திய மொழிகளைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் மற்ற பாடங்களையும் இந்திய ஆசிரியர்கள் சொல்லித் தருவதால் அவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள பள்ளி முதல்வர்கள் அகாதெமி தலைவர் பெலிண்டா சார்லஸ் கூறியதாவது: சிங்கப்பூரின் கலாசாரத்துடன் இந்திய கலாசாரம் ஒத்துள்ளது.
எனவே இந்திய ஆசிரியர்களை பணிபுரிய இங்கு அழைத்து வருகிறோம் என்றார் அவர். 2006-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்துக்கு இந்திய ஆசிரியர்களை அனுப்பும் அதிகாரப்பூர்வ நிறுவனமாக கொல்கத்தாவைச் சேர்ந்த "அகாதெமி ஃபார் புரொபஷனல் எக்ஸலன்ஸ்' நிறுவனம் உள்ளது.
2007-ல் 8 ஆசிரியர்களையும், 2009-ல் 30 ஆசிரியர்களையும், 2010-ல் 25 ஆசிரியர்களையும் இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் 31 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 620 மட்டுமே. இது மொத்த ஆசிரியர்களில் 2 சதவீதம் மட்டுமே ஆகும். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைக் கற்றுத் தருவதற்கு சிங்கப்பூரில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவேதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக ஊதியத்தைக் கொடுத்து சிங்கப்பூர் வரவழைக்கிறது என ஸ்டிரெய்ட் டைம்ஸ் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

0 comments: