Saturday 19 March 2011

தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை : இலவசமாக 35 கிலோ அரிசி, பெண்களுக்கு இலவச கிரைண்டர்/
மிக்சி, மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். ‌

தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையி்ல், கல்வியை மாநில பட்டிய‌லில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும். தமிழகத்தில் மேல் முறையீட்டு மையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், நுழைவு தேர்வு கூடாது என்பதை தி.மு.க., வலியுறுத்தும், நதிகளை தேசியமயமாக்கவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் எழுத அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்துவோம்.சிறப்பாக இயங்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் ஈழத்தமிழர் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கரும்பு பருத்தி, காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்போம். நகர்புறங்களில் நுகர்வோம் யைம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும். .விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் போன்றவற்றிற்க்கும் விரிவு படுத்துவோம். விவசாய நிலங்‌களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம், சொட்டு நீர் இல்லா விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை பெருக்குவோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தொழி்ற்சா‌லைகள், வீடுகளுக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தனி தொழிற்பேட்டை அமைக்கப்படும். வன விலங்குகளால் தாக்கி பலியாகும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு வழங்கப்படும்.

மீனவர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி மீனவர் நலன் காக்கப்படும், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவோம். கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். பால், முட்டை உற்பத்தியை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசின் சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு ‌முறை ஆணையம் அமைக்கப்படும், மஞ்சள், காமாலை போன்றவற்றிற்கு போடப்படும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மாதம் ஒரு முறை முதியோருக்கு அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் காசநோய் மையம் அமைக்கப்படும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படும். திருச்சி மதுரையில் மன நல மருத்துவமனை அமைக்கப்படும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் செவிலியர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

அரசு அலுவலர்களில் கோரிக்கைகளை கலையவும், அரசு ஊழியர்கள் சங்கங்களின் ‌கோரிக்கைளை களைய ஆணையம் அமைக்கப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களிலிருந்து 4 மாதமாக உயர்த்தப்படும். அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு ஓய்வரை அமைக்கப்படும்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வழங்கப்படும் ஒரு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இலவசமாக வழங்கப்படும்.

தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள் மேல் நிலை பள்ளிகளாகவும் மாற்றப்படும். மாணவர்களுக்கு 3 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை., அமைக்கப்படும். பல்கலைகழகங்களில் பிரெஞ்ச், ஜெர்மன், அராபி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லாத நிலை உருவாக்குவோம். அரசு கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் 2 லட்ச ரூபாய் கடன் 4 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். இதில் 2 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். பொங்கல் அன்று கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு அரசு பேருந்தில் இலவச பாஸ் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும். முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 750 ரூபாயாக உயர்த்தப்படும்.

நெசவுத்தொழில் நசியாமல் இருக்க அதிக கூட்டுறவு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரியும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்தப்படும்.

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண அதிக உப்புத்த‌ன்மை கொண்ட சாய நீரை ஆவியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும். தலித் கிறிஸ்துவர்கள் ஆதிதிராவிட பட்டியலில் இடம்பெற்றிட மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கு தனியாக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும். எஞ்சிய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீ்ட்டை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம். முன்பேர வணிகம், யூக வணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் காங்கீரிட் வீடு கட்ட வழங்கப்படும் 75 ஆயிரம் இனி ஒரு லட்சமாக உயர்த்தப்படும். ஏற்கனவே அடையாள அட்டை ‌பெற்றவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். சுற்றுலா தளங்களை சிறந்த சுற்றுலா தளங்களாக மாற்றப்படும்.

பெண்களுக்கு வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி 2ல் ஒன்றை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க, புகார்கள் விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். சென்னைக்கு அருகே புதிய துணை நகரம் உருவாக்குவோம். புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

கண்மாய்கள், ஆறுகளை தூர்வாறும் பணிகள் நடக்கும். கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலிருந்து அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

0 comments: