Sunday 20 March 2011

3-வது அணி அமைக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது .ம.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை:  எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க  போட்டியிடவிருக்கும் தொகுதிகளையும் வேட்பாளர் பட்டியலையும் ஜெயலலிதா நேற்று முன்தினம் வெளியிட்டார். தங்களை எந்த வித பேச்சு வார்த்தைக்கும் அழைக்காமல் தன்னிசையாக பட்டியலை வெளியிட்டதால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் மூழ்கின.இதனால், நடிகர் விஜயகாந்த் தலைமையில் 6 கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணி அமைக்க, தீவிர முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து நேற்று இரவு வரை அவர்கள் மூன்றாவது அணி அமைப்பது பற்றி கலந்தாலோசித்தனர். மூன்றாவது அணி அமைத்தால் தி.மு.க வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், அனைவரும் தயங்கினர். இடையில் அ.தி.மு.க தரப்பிலிருந்தும் கூட்டணி கட்சி தலைவர்களிடமிருந்தும் பேச்சு வார்த்தை தொடங்கியது. தே.மு.தி.க, மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்கும் தொகுதிகளைத் தருவதற்கு அ.தி.மு.க இறங்கி வந்தது.ம.தி.மு.க-வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும் பேச்சு வார்த்தை தொடங்கியது.ம.தி.மு.க-வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட ஒட்ட பிடாரம், வால்பாறை ஆகிய தொகுகளையும் சரத்குமார் கேட்ட தென்காசி, நான்குநேரி தொகுதிகளையும், கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளை ஒதுக்கவும் அ.தி.மு.க சம்மதம் தெரிவித்தது. அ.தி.மு.க நேற்று இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விஜயகாந்த் தலைமையிலான மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது. இன்று ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் விரும்பியபடி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று அ.தி.மு.க தெரிவித்தது.
ம.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. ம.தி.மு.க. கடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஒதுக்கியது போல் இந்த முறையும் தங்களுக்கு 35 இடங்கள் வேண்டும் என்று ம.தி.மு.க. கூறியது.
 
ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதை ஏற்க ம.தி.மு.க. மறுத்து விட்டது. கடைசியாக தங்களுக்கு 21 இடங்கள் ஒதுக்கினால்தான் உடன்பாட்டில் கையெழுத்திடுவோம் என்று ம.தி.மு.க. உறுதியாக தெரிவித்து விட்டது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் பல கட்டங்களாக பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
 
இரு தரப்பும் இறங்கி வராததால் இழுபறி நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ம.தி.மு.க. அரசியல் உயர்நிலைக் கூட்டத்தை வைகோ கூட்டினார். நேற்று காலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் வந்து வைகோவுடன் பேச்சு நடத்தினார்கள்.
 
அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்பு வைகோ நிருபர்களிடம் கூறுகையில், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. கூட்டம் முடிந்த பிறகு எங்கள் நிலை பற்றி தெரிவிக்கிறேன் என்றார். இதனால் ம.தி.மு.க. முடிவு என்ன என்ற “சஸ்பென்ஸ்” நீடித்தது. அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டினார்.
 
மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் நிர்வாகிகள் காரசாரமாக பேசினார்கள். முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவது என்றும், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

0 comments: