Monday 23 August 2010

தேர்தல் கூட்டு விஜயகாந்த் அறிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேர்தலின்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன். தேமுதிகவின் தலைமையை
ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .ஏழை-எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இலவச திருமண மண்டபம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மண்டபம் கட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுத்து நிறுத்த பார்த்தார்கள்.

இதுவரை நடத்தப்பட்ட இடைத்தேர்தல்கள் எல்லாம் ஆளுங்கட்சியினர் தேர்தலாக நடந்தது. நடைபெற உள்ள பொதுத்தேர்தல் பொது மக்கள் தேர்தலாக இருக்க வேண்டும். எல்லாம் பெண்கள் கையில்தான் இருக்கிறது. உங்களை நம்பிதான் நான் இருக்கிறேன்.

அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று பல்வேறு தகவல்கள் வருகின்றன. தேர்தல் வரட்டும் நாங்கள் யாருடன் கூட்டணி என்பது அப்போது தெரியும். விஜயகாந்த் எங்கு இருக்கிறான் என்று தெரியும்.

இன்றைய அரசியலில் தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல், என் தலைமையில் வரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சியை மக்கள் மாறி மாறி பார்த்து விட்டார்கள். தேமுதிகவிற்கும் வரும் தேர்தலில் ஆதரவு கொடுப்பார்கள். பொதுத் தேர்தலை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

இதுவரை, யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார் விஜயகாந்த். ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்ததால் கட்சியினர் சோர்வடைந்து விட்டனர்.

நல்ல வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம் யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் கட்சிக்கு நல்லது என்று விஜயகாந்த்தை நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து முதல் முறையாக தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தனது தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதையும் விஜயகாந்த் மீண்டும் கூறியுள்ளார்.

இதன் மூலம் திமுக, அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. மாறாக, காங்கிரஸ் கட்சியை தனியாக இழுத்து அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் பாமகவும் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது நிச்சயம் திமுக, அதிமுகவுக்கு பலமான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதில் அதிமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விஜயகாந்த்தின் வியூகம் என்ன, அவர் அமைக்கப் போகும் கூட்டணி யாருடன் என்பது மீண்டும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.

0 comments: