இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நடுவானில் 104 பயணிகளுடன் பறந்த விமானத்தை கடத்திய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
7 முறை வட்டமிடவேண்டும்
மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் சுற்றுலா தலம் கன்கன். இந்த இடத்துக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இங்கு இருந்து ஒரு விமானம் மெக்சிகோ சிட்டிக்கு புறப்பட்டது. இதில் பொலிவியா நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இருக்கையில் இருந்து எழுந்து தன்னிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் விமானத்தை கடத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். அவர் பெயர் ஜோஸ் மார் புளோர்ஸ் பெரைரா. இவர் மெக்சிகோ சிட்டி விமானநிலையத்தின் மீது விமானம் 7 முறை வட்டமிடவேண்டும் என்று கூறினார். அதன்படி விமானம் விமானநிலையத்தின் மீது 7 முறை வட்டமடித்தது.
மெக்சிகோ நாட்டு ஜனாதிபதி பெலிப்பே கால்டெரான் கார்சியா லூனாவுடன் பேசவேண்டும் என்றும் கோரினார். இதை ஏற்று ஜனாதிபதி கால்டெரான் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, விமானநிலையத்துக்கு விரைந்தார்.
ஆபத்தை களையவே கடத்தல்
இதற்கிடையில் விமானம் மெக்சிகோ சிட்டியில் தரைஇறங்கியது. அதிரடிப்படையினரும், மீட்புக்குழுவினரும் விமானத்துக்குள் அதிரடியாக புகுந்து பாதிரியாரை கைது செய்தனர். அவர் தெய்வீக நோக்கத்துக்காக தான் விமானத்தை கடத்தினேன். மெக்சிகோ சிட்டிக்கு பூகம்ப ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து அந்த நகரத்தை காப்பாற்றுவதற்காகவே விமானத்தை கடத்தினேன் என்றும் விமானநிலையத்தை 7 முறை சுற்றி வந்ததால், அந்த ஆபத்து நீங்கி விட்டது என்றும் அவர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
விமானம் கடத்தப்பட்ட நாள் புதன்கிழமை ஆகும். அன்றைய தினம் ஆண்டு மாதம், நாள் என எல்லாமும் 9-9-9 ஆக தான் இருந்தது. இதை திருப்பி போட்டால் எல்லாமே. 6-6-6 ஆக வரும். இந்த எண் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது. விமானத்தை கடத்துவதற்கு புனித ஆவி உதவியாக இருந்தது.
இவ்வாறு அந்த பாதிரியார் கூறினார்.
விமானத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்தபோதும் அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
முன்னாள் கைதி
இந்த கடத்தல் நாடகம் அரை மணிநேரத்தில் முடிந்து விட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரைஇறங்கினார்கள்.
கைதான பாதிரியார் மெக்சிகோ நாட்டில் 17 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். அவர் இளமைப்பருவத்தில் போதை அடிமையாக இருந்து இருக்கிறார். முன்னாள் கைதியாகவும் இருந்து இருக்கிறார். இந்த கடத்தலில் வேறு யாராவது அவருக்கு உதவி செய்து இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.